கனடிய போக்குவரத்து அமைச்சு (Transport Canada) பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளது.
புதிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் அதிக வெளிச்சம் கொண்ட LED முகப்பு விளக்குகள் (Headlights), வீதிகளில் பயணிக்கும் ஏனைய சாரதிகள் மற்றும் பாதசாரிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக எழுந்துள்ள முறைப்பாடுகளை தொடர்ந்தே கருத்துக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வெளிச்சம் வீதிப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதா என்பதை ஆராய்வதே இதன் நோக்கமாகும்.
தற்போதுள்ள முகப்பு விளக்கு தொழில்நுட்பம் சாரதிகளுக்குப் பாதை காண்பு நிலைக்கு உதவினாலும், எதிரே வரும் வாகன சாரதிகளின் பார்வையை மறைப்பதாக (Glare) முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.
இது தொடர்பாக ஏப்ரல் 20, 2026 வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை இணையதளம் ஊடாகப் பகிர்ந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ள பலர், இந்த அதிகப்படியான வெளிச்சத்தினால் சில நொடிகள் எதனையும் பார்க்க முடியாமல் போவதாக கூறுகின்றர்.
இது கைபேசியைப் பார்த்தபடி வாகனம் ஓட்டுவதற்கு இணையான ஆபத்தானது என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகளின் அடிப்படையில், வாகன விளக்குகளின் சக்தி மற்றும் நிறம் தொடர்பான புதிய விதிகளை அரசாங்கம் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
