கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற வருடாந்த “வோல்க் வித் இஸ்ரேல்” (Walk With Israel) பேரணியில் வரலாறு காணாத வகையில் சுமார் 60,000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.
அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு உணர்வுகளுக்கு எதிராக, இஸ்ரேலுக்கான தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் இப்பேரணி அமைந்ததாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள் இஸ்ரேல், கனடா, அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டு கொடிகளை ஏந்தியவாறு சென்றனர்.
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியிலேயே இந்த 57ஆவது வருடாந்த பேரணி நடைபெற்றது.
எனினும், பாதுகாப்புப் படையினரை பணி செய்ய விடாது தடுத்தமை மற்றும் தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் ஒரு பெண் உட்பட 6 பேரை றொரண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம் மற்றும் பதற்றமான சூழல் நிலவிய போதிலும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் போன்ற பகிரப்பட்ட விழுமியங்களை கொண்டாடுவதே இப்பேரணியின் நோக்கம் என யூஜேஏ பெடரேஷன் (UJA Federation) அமைப்பின் சாரா லெப்டன் (Sara Lefton) தெரிவித்துள்ளார்.










