றொரண்டோவில் லித்தியம்-அயன் மின்கல வெடிப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு – தீயணைப்புப் படைத் தளபதி எச்சரிக்கை!

றொரண்டோ (Toronto) நகரில் லித்தியம்-அயன் மின்கலங்களால் (Lithium-ion battery) ஏற்படும் தீ விபத்துகளின் எண்ணிக்கையும் அதன் தீவிரமும் கணிசமாக அதிகரித்துள்ளதாக, நகரின் தீயணைப்புப் படைத் தளபதி ஜிம் ஜெசோப் (Jim Jessop) பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மின்சார மிதிவண்டிகள் (e-bikes) மற்றும் ஸ்கூட்டர்களில் (e-scooters) பயன்படுத்தப்படும் இம்மின்கலங்கள், ‘வெப்ப ஓட்டம்’ (thermal runaway) எனப்படும் நிலையை எட்டும்போது, வெறும் 90 செக்கன்களுக்குள் நச்சுப் புகையை வெளியிட்டு அறை முழுவதையும் தீக்கிரையாக்கும் ஆபத்து கொண்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2020 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், றொரண்டோவில் இத்தகைய தீ விபத்துகள் சுமார் 600 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அண்மைய வாரத்தில் மட்டும் ரோன்செஸ்வெல்ஸ் அவென்யூ (Roncesvalles Avenue), கீல் ஸ்ட்ரீட் (Keele Street) மற்றும் வெல்லஸ்லி ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Wellesley Street East) உள்ளிட்ட பகுதிகளில் இ-பைக்குகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மூன்று மின்கல வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இணைய வழியில் எளிதாக வாங்கக்கூடிய இந்த மின்கலங்களை முறைப்படுத்துவதற்கான எவ்வித முறையான சட்ட விதிகளும் தற்போது நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles