டொராண்டோ (Toronto) நகரம் இந்த வாரத் தொடக்கத்தில் வழக்கத்திற்கு மாறான கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவைச் சந்திக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை பெய்யும் மழை, இரவு வேளையில் ஈரமான பனியாக (Wet snow) மாறக்கூடும் எனவும் எதிர்வுகூறப்படுகிறது.
டொராண்டோவில் 1 செ.மீ வரையிலும், பாரி (Barrie) மற்றும் யோர்க் (York) பிராந்தியத்தின் வடக்குப் பகுதிகளில் 4 செ.மீ வரையிலும் பனி படிய வாய்ப்புள்ளதென கூறப்படுகிறது.
அதன்படி, நாளை செவ்வாய்க்கிழமை இந்த வாரத்தின் மிகக் குளிரான நாளாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 30 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் பலத்த வடமேற்கு காற்றினால், உண்மையான வெப்பநிலையை விட உடல் உணரும் குளிர் (Wind chill) -8 முதல் –10 பாகை செல்ஸியஸ் வரை செல்லக்கூடும்.
செவ்வாயன்று அதிகபட்ச வெப்பநிலை 2 பாகை செல்ஸியஸாகவும், குறைந்தபட்சம் –5 பாகை செல்ஸியஸாகவும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்தத் திடீர் குளிர் நீண்ட காலம் நீடிக்காது. புதன்கிழமை முதல் வானிலை ஓரளவு சீரடையத் தொடங்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை வெப்பநிலை மீண்டும் 17 பாகை செல்ஸியஸ் வரை அதிகரித்து வசந்தகால வெப்பம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வார இறுதியில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










