டொராண்டோவின் டேன்போர்த் (Danforth) கோ ஸ்டேஷனில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் தொடர்பு பட்டிருந்தார்.
குறித்த பொலிஸ் அதிகாரி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என ஒன்டாரியோவின் விசேட புலனாய்வுப் பிரிவு (SIU) அறிவித்துள்ளது.
2025 டிசம்பர் 6 அன்று அதிகாலை நடந்த இந்தச் சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்பவத்தன்று மெயின் ஸ்ட்ரீட் (Main Street) மற்றும் ஸ்டீபன்சன் அவென்யூ (Stephenson Avenue) பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் நடமாடுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் அங்கு சென்றனர்.
அப்போது அந்த நபர் தன்னிடம் இருந்த பிபி துப்பாக்கியை (BB gun) எடுத்து அதிகாரியை நோக்கி நீட்டியுள்ளார்.
இதனால் தற்காப்புக்காக அந்த அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் எந்தத் தவறுமில்லை என SIU பணிப்பாளர் ஜோசப் மார்டினோ (Joseph Martino) தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணையின் போது சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் பொலிஸாரின் உடல் கமெரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
உயிரிழந்த நபரிடமிருந்து பணம், போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் மற்றும் ஒரு பேனா ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு காரணமாக உயிரிழப்பு அல்லது பலத்த காயம் ஏற்படும் போது இது போன்ற சுதந்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
