கனடா, லண்டன் (London, Ont.) பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் மெக்லீன் (Dr. James MacLean), ‘கருணைக் கொலை’ எனப்படும் MAID (Medical Assistance in Dying) சேவையை வழங்கியுள்ளார்.
இதன் போது, நோயாளர் பராமரிப்பு விதிகளை இருமுறை மீறிய குற்றத்திற்காக ஒன்ராறியோ மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கழகத்தால் (College of Physicians and Surgeons of Ontario) கண்டிக்கப்பட்டுள்ளார்.
மனநலம் மற்றும் குடல் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை, மருத்துவர் ஜேம்ஸ் மெக்லீன் ஒரு காபி கடைக்கு வெளியே சந்தித்து MAID தொடர்பான தகுதி மதிப்பீட்டை நடத்தியுள்ளார்.
மேலும், அந்த நோயாளியுடன் அளவுக்கு அதிகமாக குறுஞ்செய்திகள் (Text messages) அனுப்பியதும், தனது சொந்த வாகனத்தில் அவரை MAID வழங்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றதும் தொழில்முறை எல்லைகளை மீறிய செயலாகக் கருதப்பட்டுள்ளது.
நினைவிழந்த நிலையில் இருந்த மற்றொரு நோயாளிக்கு MAID மருந்து வழங்கிய போது, தனது பையில் தசை முடக்க மருந்தைக் (Neuromuscular-blocking medication) கண்டறிய முடியாததால், மயக்க மருந்தை மட்டும் செலுத்திவிட்டு நோயாளி இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
ஆனால், மருத்துவர் சென்ற சிறிது நேரத்தில் நோயாளி மீண்டும் சுவாசிக்கத் தொடங்கியுள்ளார். இதனால் பதறியடித்துத் திரும்பிய மருத்துவர், கூடுதல் மருந்து செலுத்தி அவரது மரணத்தை உறுதி செய்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மருத்துவரின் அலட்சியம் மற்றும் தவறான வழிமுறைகள் குறித்துக் கவலை வெளியிட்டுள்ள மருத்துவக் கழகம், அவரைத் தீவிரக் கண்காணிப்பின் கீழ் (Supervision) மருத்துவப் பயிற்சி செய்ய உத்தரவிட்டுள்ளது.
