கனடாவில் தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளை ஒப்படைத்து நஷ்டஈடு பெற்றுக்கொள்ளும் திட்டம் நிறைவடைய இன்னும் ஒரு வாரமே உள்ளது.
அதற்கமைய, இதுவரை 51,000க்கும் அதிகமான துப்பாக்கிகள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கார்யானந்தசங்கரி (Gary Anandasangaree) தெரிவித்துள்ளார்.
மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும் இத்திட்டத்திற்காக, சுமார் 1,36,000 துப்பாக்கிகளுக்கு நஷ்டஈடு வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2020 மே மாதம் முதல், AR-15 மற்றும் Ruger Mini-14 உட்பட சுமார் 2,500 வகையான துப்பாக்கிகளை “போர்க்களத்திற்குரியவை” என வகைப்படுத்தி ஒட்டாவா (Ottawa) தடை செய்துள்ளது.
இத்திட்டத்தை துப்பாக்கி கட்டுப்பாட்டு ஆர்வலர்கள் வரவேற்றுள்ள போதிலும், இது சட்டத்தை மதிக்கும் குடிமக்களைக் குறிவைக்கும் வீணான செயல் என கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் மற்றும் துப்பாக்கி உரிமையாளர்கள் விமர்சித்துள்ளனர்.
இதேவேளை, வேட்டைக்கு பயன்படும் துப்பாக்கிகளை அரசு தடை செய்யவில்லை என்றும், தாக்குதல் நடத்தக்கூடிய ஆயுதங்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் நத்தலி ப்ரோவோஸ்ட் (Nathalie Provost) தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதற்கு கனடிய உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் சம்மதம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதிக்குள் தடைசெய்யப்பட்ட அனைத்து ஆயுதங்களும் செயலிழக்கச் செய்யப்பட வேண்டும் அல்லது அகற்றப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
