கனடாவின் அதிக வருமானம் ஈட்டும் முதியோருக்கான முதியோர் பாதுகாப்பு (Old Age Security – OAS) கொடுப்பனவுகளைக் குறைக்க வேண்டும் என பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக (UBC) பேராசிரியர் பால் கெர்ஷா (Paul Kershaw) முன்மொழிந்துள்ளார்.
78 பில்லியன் டொலர் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
தற்போதுள்ள விதிகளின்படி, ஆண்டுக்கு 185,000 டொலர்கள் வரை வருமானம் ஈட்டும் தம்பதியினர் கூட முழுமையான சலுகையைப் பெறுவது முறையற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆண்டு வருமானம் 100,000 டொலர்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு இந்தக் கொடுப்பனவைக் குறைப்பதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 7 பில்லியன் டொலர்களைச் சேமிக்க முடியும் என Research Co. நடத்திய புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த யோசனைக்கு கனடியர்களில் நான்கில் மூன்று பங்கினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் சேமிக்கப்படும் நிதியைக் கொண்டு குறைந்த வருமானம் ஈட்டும் முதியவர்களின் வறுமையை ஒழிக்கவும், வீட்டுவசதி மற்றும் கல்வித் துறைகளில் முதலீடு செய்யவும் முடியும் என பேராசிரியர் பால் கெர்ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கனடிய நிதித்துறை (Department of Finance) நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்றாலும், அரசாங்கம் எப்போதும் முதியவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான OAS கொடுப்பனவு 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதோடு, 2025 ஆம் ஆண்டில் முழு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மேலதிகமாக 880 டொலர்கள் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
