றொரண்டோவின் நோர்த் யோர்க் (North York) பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சமரில், றொரண்டோ பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
அதிகாலை 5:42 மணியளவில் மார்த்தா ஈட்டன் வே (Martha Eaton Way), டிரிதேவி டிரைவ் (Trethewey Drive) மற்றும் பிளாக் கிரீக் டிரைவ் (Black Creek Drive) சந்திப்புக்கு அருகில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் பொலிஸார் சோதனைக் கட்டளையை (Search warrant) நிறைவேற்றச் சென்றபோது இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.
இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு துப்பாக்கிக்குண்டு பாய்ந்துள்ளது.
அவர் அவசர அவசரமாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (Trauma centre) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் காயமடைந்த இரண்டாவது நபர் ஒருவரும் உயிராபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் யார் என்ற விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசேட புலனாய்வுப் பிரிவு (Special Investigations Unit – SIU) தனது சுயாதீன விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜாவாய் ராய் (JahVai Roy) என்ற 8 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான அதே நோர்த் யோர்க் (North York) குடியிருப்பு வளாகத்திலேயே இந்தச் சம்பவமும் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.










