கனடாவின் மார்க்கம் (Markham) நகரில் உள்ள பூங்கா ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை ஓநாய் (Coyote) ஒன்று கீறியதை அடுத்து, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் அவசர விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
McCowan Road மற்றும் 16th Avenue பகுதிக்கு அருகில் இச்சம்பவம் நடந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக சிறுவனுக்கு பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை.
எனினும், கடந்த 24 மணித்தியாலங்களில் மார்க்கம் பகுதியில் ஓநாய்களின் ஆபத்தான நடமாட்டம் குறித்து மூன்று முறை முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional Police – YRP) தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதத்திலும் இதே பகுதியில் நான்கு வயது சிறுவன் உட்பட இரண்டு சிறுவர்கள் ஓநாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓநாய்கள் நடமாடும் பகுதிக்கு அருகில் செல்லவோ அல்லது அவற்றுக்கு உணவளிக்கவோ வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
வளர்ப்புப் பிராணிகளை எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் (Leash) வைத்திருக்குமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஓநாயைக் கண்டால் ஓடாமல், கைகளை உயர்த்தி உங்களை பெரியவராகவும், சத்தமிட்டு பயமுறுத்துபவராகவும் காட்டிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், புகைப்படம் எடுக்க முயற்சிக்காமல் பாதுகாப்பான தூரத்திற்குச் செல்லுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஓநாய்கள் மனிதர்களை நெருங்கினாலோ அல்லது ஆக்ரோஷமாக நடந்துகொண்டாலோ உடனடியாக பொலிஸாரை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.










