கனடாவின் நியூ பிரன்சுவிக் (New Brunswick) மாகாணத்தில் மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்துத் திறன் (literacy levels) மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகப் புதிய தணிக்கை அறிக்கை (Auditor General’s report) ஒன்று எச்சரித்துள்ளது.
2024-25 கல்வியாண்டில், தரம் 4 (Grade 4) வாசிப்புத் தேர்வில், மாகாணத்திலுள்ள 130 ஆங்கிலப் பள்ளிகளில் வெறும் 4 பள்ளிகள் மட்டுமே இலக்கை எட்டியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த பத்தாண்டுகளாகவே மாணவர்களின் கல்வித் தரம் சரிந்து வருவதாகவும், 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, 15 வயதுடைய மாணவர்களின் வாசிப்புத் திறன் கனடாவிலேயே மிகக் குறைந்த மட்டமான 72% ஆக உள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரிப்பு, போதிய ஆதரவு ஊழியர்கள் இன்மை மற்றும் முறையான கண்காணிப்பு இல்லாததே இச்சரிவுக்கு முக்கிய காரணங்கள் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தச் சிக்கலைச் சரிசெய்யும் நோக்கில், கல்வி அமைச்சர் Claire Johnson, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிப் பள்ளிகளுக்குத் தனித்தனியாக 12 ஆண்டு கால புதிய கல்வித் திட்டங்களை அறிவித்துள்ளார்.
இதன்கீழ், மேலும் 210 கல்வி உதவியாளர்கள், 40 வள ஆசிரியர்கள் மற்றும் 20 பள்ளி ஆலோசகர்களை நியமிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இம்மாற்றங்கள் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த காலம் எடுக்கும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.










