உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளைப் பார்ப்பதற்காக மைதானங்களுக்கு வரும் ரசிகர்கள், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒரு தண்ணீர் பாட்டிலை (disposable water bottle) உடன் எடுத்துவர FIFA அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
கனடா (Canada) மற்றும் அமெரிக்கா (United States) ஆகிய நாடுகளில் உள்ள மைதானங்களுக்குள் ரசிகர்கள் தங்களின் சொந்த தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு வர இந்த வார தொடக்கத்தில் FIFA தடை விதித்திருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், வெள்ளிக்கிழமை இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை றொரண்டோ மேயர் ஒலிவியா சௌ (Toronto Mayor Olivia Chow) “வெறும் பணக் கொள்ளை” (pure money grab) என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
புதிய விதிமுறையின்படி, ரசிகர்கள் கொண்டு வரும் பாட்டில் மென்மையான பிளாஸ்டிக்கால் ஆனதாகவும் (soft plastic), 590 மில்லிலிட்டர் (20 ounces) அளவு கொண்டதாகவும், தொழிற்சாலையில் சீல் வைக்கப்பட்டதாகவும் (factory sealed) இருக்க வேண்டும்.
எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் பயன்படுத்தக்கூடிய கடினமான தண்ணீர் பாட்டில்களுக்கு (Hard-sided reusable water bottles) தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெப்பமான காலநிலையில் தண்ணீர் குடிக்க அனுமதி இல்லாதது ரசிகர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என றொரண்டோ மருத்துவ அதிகாரி டாக்டர் மிச்செல் முர்டி (Dr. Michelle Murti) மற்றும் உலகக் கிண்ண செயலகத்தின் நிர்வாக பணிப்பாளர் ஷரோன் பொலன்பாக் (Sharon Bollenbach) ஆகியோர் கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










