அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் ‘ஸ்க்ரூவோர்ம்’ (Screwworm) எனப்படும் ஆபத்தான ஒட்டுண்ணிப் புழு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கிருந்து வரும் கால்நடைகளுக்கு கனடா தற்காலிக இறக்குமதித் தடைகளை விதித்துள்ளது.
டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் உள்ள ஒரு கன்றுக் குட்டியில் இந்த ஒட்டுண்ணி பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகளின் இறக்குமதிக்கு இந்தத் தடை பொருந்தும் என கனடிய உணவு ஆய்வு முகமை (Canadian Food Inspection Agency – CFIA) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
எல்லையைக் கடப்பதற்கு முந்தைய 21 நாட்களுக்குள் டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் இருந்த விலங்குகள் எதற்கும் கனடாவுக்குள் நுழைய அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவோர்ம்’ (New World screwworm) என்பது வெப்ப இரத்தம் கொண்ட விலங்குகளின் உயிருள்ள திசுக்களை உண்ணும் ஒரு ஒட்டுண்ணிப் புழுவாகும்.
இது விலங்குகளுக்குப் பலத்த மற்றும் உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.
விலங்குகளின் உடலில் உள்ள காயங்கள் நாளுக்கு நாள் மோசமடைதல், அதிலிருந்து சீழ் வடிதல் அல்லது துர்நாற்றம் வீசுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் விழிப்புடன் இருக்குமாறு கால்நடை உரிமையாளர்களையும் மருத்துவர்களையும் CFIA கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போதைக்கு கனடாவில் இந்த ஒட்டுண்ணி பாதிப்புகள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக கனடா தெரிவித்துள்ளது.










