ஆல்பெர்ட்டாவில் தீவிரமடையும் பிரிவினைவாத ஆதரவு – இந்த இலையுதிர்காலத்தில் வாக்கெடுப்பு!

கனடாவின் மத்திய ஆல்பெர்ட்டா (Alberta) மாகாணத்தில் உள்ள சண்ட்ரே (Sundre) என்ற சிறிய நகரில், ஒட்டாவா (Ottawa) கூட்டாட்சி அரசுக்கு எதிரான அதிருப்தி காரணமாக ஆல்பெர்ட்டா பிரிவினைவாதத்திற்கான (சுயாட்சி) ஆதரவு தீவிரமடைந்து வருகிறது.

எண்ணெய் மற்றும் எரிவாயு மேம்பாடு, குழாய்த்திட்டங்கள் மற்றும் கூட்டாட்சி செலவினங்கள் ஆகியவற்றில் ஆல்பெர்ட்டா அதிக பங்களிப்பை வழங்கிய போதிலும், அதற்குரிய பலன்கள் மாகாணத்திற்குக் கிடைப்பதில்லை என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அண்மையில் நடத்தப்பட்ட லெஜர் (Leger) கருத்துக்கணிப்பில், 23 சதவீத ஆல்பெர்ட்டா மக்கள் தனி நாடாகப் பிரிவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சண்ட்ரே நகரில் இந்த ஆதரவு விகிதம் இன்னும் அதிகமாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, ‘ஸ்டே ப்ரீ ஆல்பெர்ட்டா’ (Stay Free Alberta) என்ற அமைப்பு பொதுமக்களிடம் 3 இலட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துகளைப் பெற்று நடத்திய பிரிவினைவாத மனுவை, பூர்வகுடி மக்களுடன் (First Nations) போதிய ஆலோசனை நடத்தவில்லை எனக்கூறி நீதிமன்ற நீதிபதி அண்மையில் ரத்து செய்தார்.

இதனிடையே, ஆல்பெர்ட்டா மாகாண பிரீமியர் டேனியல் ஸ்மித் (Premier Danielle Smith) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கனடாவிலிருந்து ஆல்பெர்ட்டா பிரிந்து செல்வது குறித்த சட்டப்பூர்வமான இறுதி வாக்கெடுப்பை எதிர்காலத்தில் நடத்துவதா இல்லையா என்பது குறித்து, இந்த இலையுதிர்காலத்தில் (ஒக்டோபர் 19 அன்று) ஆல்பெர்ட்டா மக்களிடம் மாகாண அளவிலான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தாம் கனடாவுடன் இணைந்திருப்பதையே ஆதரிப்பதாகவும், எனினும் மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கவே இந்த வாக்கெடுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles