கனடிய கடவுச்சீட்டு (Passport) விண்ணப்பங்களைச் செயல்முறைப்படுத்துவதில் 30 வேலை நாட்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டால், விண்ணப்பதாரர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் எனும் புதிய சேவை உத்தரவாதத்தை மத்திய அரசு புதன்கிழமை முதல் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.
குடிவரவு அமைச்சர் லீனா மெட்லெஜ் டயாப் (Lena Metlege Diab) செவ்வாய்க்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“கனடியர்கள் அரசாங்கத்திடமிருந்து நம்பகமான சேவையை எதிர்பார்க்கிறார்கள்” என்று குறிப்பிட்ட அமைச்சர் டயாப், இந்த “30 நாட்கள் அல்லது இலவசம்” (30 days or free) என்ற கொள்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் என்றார்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து, கடவுச்சீட்டு அச்சிடப்படும் நாள் வரையிலான காலப்பகுதி இதில் கணக்கிடப்படும். இருப்பினும், தபால் மூலம் அனுப்பப்படும் நேரம் இதில் சேர்க்கப்படாது.
வேலைவாய்ப்பு அமைச்சர் பேட்டி ஹாஜ்டு (Patty Hajdu) கூறுகையில், இந்த நடவடிக்கை கனடியர்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.
எனினும், அவசர கால விண்ணப்பங்கள் (Urgent/Express), நிர்வாகக் கட்டணங்கள் மற்றும் சில விசேட ஆவணங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
முறையான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களுடன் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
