அமெரிக்கா செல்லும் கனடியர்களுக்கு எச்சரிக்கை –  விமான நிலையங்களில் அதிரடி கண்காணிப்பு!

அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பகுதி முடக்கம் (Partial Government Shutdown) காரணமாக, அந்நாட்டு விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கப் பிரிவு (ICE) அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வழக்கமாகப் பணியாற்றும் TSA ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ஈடுசெய்ய, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்த திடீர் மாற்றத்தால், அமெரிக்கா செல்லும் கனடியப் பயணிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

குறிப்பாக, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ICE அதிகாரிகள் ஈடுபடுவதால், பயணிகள் மேலதிக விசாரணைகளுக்கு உள்ளாக்கப்படலாம் என குடிவரவு சட்டத்தரணி க்ஸேனியா செர்ன் மெக்கல்லம் (Ksenia Tchern McCallum) அறிவுறுத்தியுள்ளார்.

கனடியர்கள் 6 மாதம் வரை விசா இன்றி தங்கும் அனுமதி பெற்றிருந்தாலும், எல்லையில் அதிகாரிகளின் கேள்விகளுக்கு உண்மையான பதில்களை வழங்குவது அவசியமாகும்.

இதனால், அடிக்கடி பயணம் செய்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் மடிக்கணினியுடன் தங்கிப் பணியாற்றும் ‘டிஜிட்டல் நோமட்ஸ்’ (Digital Nomads) ஆகியோர் கூடுதல் கண்காணிப்புக்கு உள்ளாக நேரிடும்.

அமெரிக்கா செல்லும் கனடியர்கள் தங்களின் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தல் கடிதம், தங்குமிட விபரங்கள் மற்றும் போதுமான நிதி இருப்பதற்கான ஆதாரங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கனடிய விமான நிலையங்களில் உள்ள (Pre-clearance) வசதி தற்போதைக்கு மாற்றமின்றி தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles