கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில், 30 வருடங்களுக்கு முந்தைய $32.75 பெறுமதியான வாகன நிறுத்துமிட அபராதக் கட்டணத்தை (Parking ticket) செலுத்தவில்லை என்பதற்காக, சாரதி ஒருவரின் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவின் லைம்ஹவுஸ் (Limehouse) பகுதியைச் சேர்ந்த ஜியோப் கிளென்டென்னிங் (Geoff Clendenning) என்பவருக்கே இந்த விசித்திரமான அனுபவம் ஏற்பட்டுள்ளது.
1996ஆம் ஆண்டு றொரண்டோ (Toronto) நகரில் பெறப்பட்ட பார்க்கிங் டிக்கெட் ஒன்று முழுமையாகச் செலுத்தப்படாததால், அவரது சாரதி உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கடிதம் கிடைத்துள்ளது.
ஆரம்பத்தில் இதை ஒரு மோசடி (Scam) என அவர் நினைத்துள்ளார்.
இது குறித்து சர்வீஸ் ஒன்ராறியோவை (Service Ontario) அவர் நாடியபோது, பழைய நிலுவைத் தொகைக்காக ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் $32.75 அபராதத்தை செலுத்திய போதிலும், இடைநீக்கம் செய்யப்பட்ட உரிமத்தை மீண்டும் பெற (Reinstatement fee) கூடுதலாக $281 செலுத்த வேண்டியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஒன்ராறியோ போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Transportation) மற்றும் றொரண்டோ நகர நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
செலுத்தப்படாத போக்குவரத்து அபராதங்களுக்கு காலாவதித் தேதி கிடையாது என்றும், நீதிமன்ற உத்தரவின்படி அவை முழுமையாகச் செலுத்தப்படும் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
றொரண்டோ நகரம் தற்போது பல மில்லியன் டாலர் பெறுமதியான பழைய நிலுவை அபராதங்களை வசூலிக்கும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
