கோவிட்-19 தடுப்பூசி, முகக்கவசம் மற்றும் பரிசோதனைகளிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில், மருத்துவ விதிமுறைகளை மீறி 1,400-க்கும் மேற்பட்ட கடிதங்களை ‘இலாபத்திற்காக’ வழங்கிய டொராண்டோ வைத்தியரின் உரிமம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வைத்தியர் செலஸ்டி ஜீன் தேர்வால் (Dr. Celeste Jean Thirlwell) என்பவரின் மருத்துவ உரிமத்தை ஒன்டாரியோ மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒழுங்குமுறை தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ஒக்டோபர் வரையிலான குறுகிய காலப்பகுதியில், இவர் 1,425 விதிவிலக்கு கடிதங்களை எழுதியுள்ளார்.
புதிய நோயாளிகளுக்கு ஒரு கடிதத்திற்கு 300 டொலர்கள் வரை வசூலித்ததோடு, குடும்ப உறுப்பினர்களுக்குக் கூடுதல் தள்ளுபடிகளையும் வழங்கியுள்ளார்.
ஒரு மனநல மருத்துவரான (Psychiatrist) இவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அல்லது தொற்றுநோயியல் துறையில் முறையான பயிற்சி இல்லாத நிலையிலும், தொலைபேசி வாயிலாக ஒரு நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இவ்வாறான கடிதங்களை வழங்கியதாகத் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொது இடத்தில் அமர்ந்து கொண்டு பயணிகளுக்கிடையே உரத்த குரலில் இவ்வாறான விதிவிலக்குகள் குறித்து அவர் பேசியதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீர்ப்பாயத்தின் விசாரணைகளில் முறையாகப் பங்கேற்கத் தவறியதுடன், தொழில்முறை தரத்தைப் பேணத் தவறியமை மற்றும் அவமதிப்புக்குரிய வகையில் நடந்துகொண்டமை ஆகிய காரணங்களுக்காக அவரது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அவருக்கு 10,370 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
