கனடாவில் அடுத்த ஓராண்டுக்குள் வரவிருக்கும் அடமானக் கடன் புதுப்பித்தல்களால் (Mortgage renewals) பல குடும்பங்கள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என கனடா வங்கி (Bank of Canada) எச்சரித்துள்ளது.
றொரண்டோ (Toronto) பகுதியில் அடமானக் கடன் பெற்றுள்ளவர்களில் சுமார் 10 சதவீதமானோர், தங்களின் கடனை மறுநிதியாக்கம் (Refinance) செய்ய முடியாத இக்கட்டான சூழல் ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மிகக் குறைந்த வட்டியில் கடன் வாங்கியவர்கள், தற்போது 15 சதவீதம் வரை கூடுதல் மாதாந்திர தவணையைச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வீடுகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், வீட்டின் மதிப்பை விட கடன்தொகை அதிகமாக இருக்கும் சூழல் நிலவுகிறது.
இதனால் வங்கிகள் புதிய கடன்களை வழங்கவோ அல்லது வட்டி விகிதத்தைக் குறைக்கவோ மறுக்கின்றன.
இந்த இக்கட்டான நிலையை ஒரு ‘மரணச் சுழல்‘ என அடமானத் தரகர் ரான் பட்லர் (Ron Butler) வர்ணித்துள்ளார்.
வருமான உயர்வு இல்லாதவர்கள் மற்றும் வேலை இழந்தவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீங்கள் தற்போதைய வட்டி உயர்வால் பாதிக்கப்பட்டிருந்தாலும், புதிய வங்கிகளுக்கு மாறாமல் பழைய வங்கியிலேயே (Original lender) கடனைப் புதுப்பித்துக் கொள்வதன் மூலம் வீட்டை இழப்பதில் இருந்து தப்பிக்கலாம் என விக்டர் டிரான் (Victor Tran) போன்ற நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.










