கனடாவில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் இந்த வார இறுதியில் பெருமளவில் குறையவுள்ளதாகத் தொழில்துறை ஆய்வாளர் டான் மெக்டேக் (Dan McTeague) தெரிவித்துள்ளார்.
எனவே, வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு வெள்ளிக்கிழமை வரை காத்திருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஈரான் நாட்டுடன் அறிவித்துள்ள இரண்டு வார கால போர்நிறுத்தம் காரணமாகச் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணமாகும்.
இதன்படி, வியாழக்கிழமை ஒரு லீற்றருக்கு 2 காசுகள் குறைந்து 186.9 ஆகவும், வெள்ளிக்கிழமை மேலும் 13 காசுகள் குறைந்து 173.9 ஆகவும் பெற்றோல் விலை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டீசல் விலையைப் பொறுத்தவரை, வெள்ளிக்கிழமை லீற்றருக்கு 28 காசுகள் வரை குறைந்து 206.9 ஆக விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது.
இதன் மூலம் வாகனங்களின் எரிபொருள் தொட்டியின் அளவைப் பொறுத்து 10 முதல் 15 டொலர்கள் வரை சேமிக்க முடியும் என டான் மெக்டேக் (Dan McTeague) குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைக்கு அவசரத் தேவைக்கு மட்டும் குறைந்த அளவில் எரிபொருளை நிரப்பிவிட்டு, வெள்ளிக்கிழமை வரை காத்திருப்பது சிறந்தது என அவர் மேலும் கூறியுள்ளார்.










