பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, கோக்விட்லம் (Coquitlam) பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கிய 8 பேர் ஹெலிகொப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை அதிகாலை Pipeline Road பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவினால் வீதிகள் துண்டிக்கப்பட்ட நிலையில், தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் இவர்களை அந்தரத்தில் தொங்கியபடி மீட்டுள்ளனர்.
இதேவேளை, Chilliwack நதியை அண்மித்திருக்கும் 30 குடியிருப்புப் பகுதிகளுக்கு வெளியேற்ற எச்சரிக்கை (Evacuation alert) விடுக்கப்பட்டுள்ளது.
நதியின் நீர்மட்டம் அபாயகரமாக உயர்ந்து வருவதால், பிரேசர் வலி (Fraser Valley) பிராந்தியத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் பனி உருகுதல் காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக Environment Canada எச்சரித்துள்ளது.
கோக்விட்லம் தீயணைப்புப் படைத் தலைவர் ஸ்காட் யங் (Scott Young) கூறுகையில், நான்கு வீடுகள் மற்றும் இரண்டு தொழிற்சாலைகள் இந்த நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ வான்கூவர் (Metro Vancouver) பகுதியில் 130 மில்லிமீற்றர் வரையிலும், ஏனைய பகுதிகளில் பலத்த காற்றும் பனிப்பொழிவும் எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.










