பிராம்ப்டன் ஸ்கிராப் யார்டில் பயங்கர தீ விபத்து – ஜன்னல், கதவுகளை மூடி வைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்!

கனடாவின் பிராம்ப்டன் (Brampton) பகுதியில் உள்ள பழைய இரும்புப் பொருட்கள் சேகரிக்கும் ஸ்கிராப் யார்டு (Scrap Yard) ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

இதனால் கிரேட்டர் றொரண்டோ (GTA) பகுதி முழுவதும் அடர்ந்த கருப்புப் புகை சூழ்ந்துள்ளது.

இன்று மாலை 4:18 மணியளவில், கோர்வே (Goreway) மற்றும் இன்டர்மாடல் டிரைவ்ஸ் (Intermodal Drives) சந்திப்புப் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

தீயின் தாக்கம் மற்றும் புகை மூட்டத்தை ட்ரோன் (Drone) மூலம் கண்காணித்து, அதிகளவு தண்ணீரைப் பாய்ச்சி தீயைக் கட்டுப்படுத்த பிராம்ப்டன் தீயணைப்பு மற்றும் அவசரக்கால சேவையின் (BFES) வீரர்கள் முயன்று வருகின்றனர்.

விபத்து காரணமாகப் பரவும் அடர்ந்த புகையினால், அருகில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறும், காற்றோட்ட வசதிகளை (Ventilation systems) தற்காலிகமாக நிறுத்துமாறும் உதவி தீயணைப்புத் தலைவர் மைக்கேல் வெயிட் (Michael Waite) கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தீ விபத்தால் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் (Pearson International Airport) சேவைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

அத்தோடு, இதுவரை காயங்கள் எதுவும் பதிவாகவில்லை எனப் பொலிஸ் அதிகாரி டைலர் பெல் (Tyler Bell) தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles