பிரதமர் மார்க் கார்னியின் கருத்துக்கு கண்டனம் –  மன்னிப்பு கோருமாறு வலியுறுத்தல்!

கிராஸி நெரோஸ் (Grassy Narrows) பழங்குடியின மக்களின் பாதரச நச்சுப் பாதிப்பு (Mercury poisoning) குறித்த போராட்டத்தை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும் பழங்குடியினத் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை டொராண்டோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், போராட்டம் நடத்திய பெண்ணைப் பார்த்து “என்னால் அவரை விட அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியும்” (I can outlast her) எனக் கூறி பிரதமர் சிரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிராஸி நெரோஸ் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்ஸி ஐசக் (Chrissy Isaacs) என்ற பெண், 1960-70களில் டிரைடன் பேப்பர் மில் (Dryden Paper Mill) ஆற்றில் கலந்த பாதரசத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு கோரி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பிரதமரின் இந்தச் செயல் பழங்குடியின மக்களின் உணர்வுகளை ஏளனம் செய்வதாக உள்ளதாக கன்சர்வேடிவ் எம்.பி பில்லி மோரின் (Billy Morin) மற்றும் என்டிபி எம்பி லியா கசான் (Leah Gazan) ஆகியோர் சாடியுள்ளனர்.

1960களில் ஆற்றில் கொட்டப்பட்ட 9,000 கிலோ பாதரசத்தால் இன்றும் அப்பகுதி மக்கள் நரம்பு மண்டலப் பாதிப்பு உள்ளிட்ட தீவிர நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.

2019 இல் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் (Justin Trudeau) இதேபோன்ற போராட்டக்காரரை அவமதித்துப் பின்னர் மன்னிப்பு கேட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள கிராஸி நெரோஸ் தலைமை அதிகாரி ஷெரி அகபி (Sherry Ackabee), மார்க் கார்னியும் உடனடியாகத் தனது செயலுக்கு மன்னிப்பு கோர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles