அல்பெர்டா மாகாணத்தில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் மாகாண அரசுகளுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.
கனடிய அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருமாறு அல்பெர்டா பிரீமியர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒன்டாரியோ, சஸ்காட்சுவான் மற்றும் கியூபெக் மாகாணங்களின் பிரீமியர்களும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மார்க் கார்னிக்கு (Mark Carney) கடிதம் எழுதியுள்ளனர்.
தற்போதுள்ள நடைமுறைப்படி, மாகாண அளவிலான உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் முழு அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.
இதனை மாற்றி, மாகாண அரசுகளால் பரிந்துரைக்கப்படும் நீதிபதிகளை மட்டுமே நியமிக்க வேண்டும் என அல்பெர்டா நீதியமைச்சர் மிக்கி அமெரி (Mickey Amery) வலியுறுத்தியுள்ளார்.
இதற்கான தீர்மானம் இந்த வாரம் அல்பெர்டா சட்டசபையில் நிறைவேற்றப்படவுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளதைப் போல, மாகாண நீதிபதிகளை நியமிப்பதில் உள்ளூர் அரசுகளுக்குப் பங்கு இருக்க வேண்டும் என ஸ்மித் வலியுறுத்துகிறார்.
இருப்பினும், இந்தக் கோரிக்கை நீதிமன்றங்களை அரசியல்மயமாக்கும் முயற்சி என எதிர்க்கட்சியான NDP மற்றும் கனடிய சட்டத்தரணிகள் சங்கம் (Canadian Bar Association) கடும் விமர்சனம் தெரிவித்துள்ளன.
இத்தகைய அரசியலமைப்பு மாற்றத்திற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுடன் குறைந்தபட்சம் ஏழு மாகாணங்களின் ஒப்புதல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
