கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தில் உள்ள டம்பிளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது குறித்த பொதுமக்களின் கவலைகள் மற்றும் சமூக ஊடகப் போக்குகள் தொடர்பில் பிரதமர் மார்க் கார்னிக்கு (Mark Carney) அனுப்பப்பட்ட முக்கிய குறிப்பு (Memo) ஒன்று வெளியாகியுள்ளது.
பெப்ரவரி 10ஆம் திகதி, ஜெஸ்ஸி வான் ரூட்சேலார் (Jesse Van Rootselaar) என்ற 18 வயது திருநங்கை, தனது தாய் மற்றும் சகோதரரைக் கொன்றதுடன், பாடசாலையொன்றில் புகுந்து ஆறு பேரைக் சுட்டுக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவத்தில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு பிரதமரின் ஆலோசனைக் குழு (Privy Council Office) பிரதமருக்கு அனுப்பிய ரகசியக் குறிப்பில், பொதுமக்களின் துக்கம் தற்போது “அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல்” நோக்கிய விவாதமாக மாறி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிக் கட்டுப்பாடு, மனநலக் குறைபாடுகளுக்கான தலையீடுகள் மற்றும் ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகளை அதிகாரிகள் தவறவிட்டார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சமூக ஊடகங்களில் கொலையாளியின் பாலின அடையாளம் (Transgender identity) குறித்து தவறான தகவல்களும், திருநங்கைகளுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரங்களும் பரவி வருவதாகவும், இது பொது விவாதத்தைப் பிரித்தாளும் தன்மையைக் கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரப்பூர்வ குறிப்பு எச்சரித்துள்ளது.
இத்தகவல்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (Access to Information Act) மூலம் தற்போது ஊடகங்களுக்குக் கிடைத்துள்ளன.
