கியூபெக் (Quebec) உயர்நீதிமன்றம், ஒரு ரகசிய வழக்கின் தீர்ப்பை வெளியிடுவதைத் தடுக்க முயன்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒரு பொலிஸ் உளவாளிக்கும் (Police Informant) பொலிஸாருக்கும் இடையிலான இந்த மர்மமான வழக்கு, பல ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் சில விபரங்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கை ரகசியமாக வைக்க முயன்ற மத்திய நீதித்துறையின் நடவடிக்கை “நீதிமன்ற நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகும்” (Abuse of process) என்று நீதிபதி லூகாஸ் கிரனோசிக் (Lukasz Granosik) சாடியுள்ளார்.
கனேடிய உரிமைகள் மற்றும் சுதந்திர சாசனத்தின்படி, நீதிமன்ற விசாரணைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படைத் கோட்பாட்டினை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ரகசிய விசாரணையில் தண்டனை பெற்ற உளவாளி ஒருவர், பின்னர் மேல்முறையீட்டில் வெற்றி பெற்றதுடன், தற்போது பொலிசார் மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கு எதிராக 5.8 மில்லியன் டொலர் நஷ்டஈடு கோரி வழக்குத் தொடந்துள்ளார்.
ஊடக நிறுவனங்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
ஒரு நாட்டின் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க வெளிப்படைத்தன்மை அவசியம் என்று ஊடகத் தரப்பு வழக்கறிஞர் கிறிஸ்டியன் லெப்லாங்க் (Christian Leblanc) தெரிவித்துள்ளார்.
பெயர்கள் மறைக்கப்பட்ட நிலையில் இந்தத் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ள போதிலும், நீதித்துறை வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
