டொராண்டோ (Toronto) பிராந்திய வர்த்தக சபை, நகரின் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க “பணியை முடிப்போம்” (Finish the job) எனும் தொனிப்பொருளில் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் டொராண்டோ ஓட்டுநர்கள் சராசரியாக 100 மணிநேரத்தை போக்குவரத்து நெரிசலில் இழந்துள்ளதாக TomTom தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி,
- சந்திகளில் (Intersections) தேவையின்றி வாகனங்களை நிறுத்தி வழிமறிப்பவர்கள் மீது தானியங்கி கண்காணிப்பு மூலம் அபராதம் விதித்தல்.
- கட்டுமானப் பணிகளின் போது வீதி மூடப்படுவதைத் தவிர்க்க ஒருங்கிணைந்த திட்டமிடல்.
- பிரதான நெடுஞ்சாலைகளில் உள்ள நெரிசல் மிகுந்த இடங்களை (Bottlenecks) கண்டறிந்து மேம்படுத்துதல்.
- வீதி மூடல்களுக்கான கட்டணத்தை அதிகரித்தல் (தற்போது ஒரு வீதி மூடலால் ஏற்படும் சமூகப் பொருளாதார இழப்பு $1.7 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது).
- போக்குவரத்து ஓட்டத்தை சீர்செய்ய “ஸ்மார்ட் சிக்னல்களை” (Smart signals) அறிமுகப்படுத்துதல்.
உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மாகாண போக்குவரத்து அமைச்சர் பிரப்மீத் சர்க்காரியா (Prabmeet Sarkaria) கூறுகையில், ஒன்ராறியோ அரசாங்கம் ஏற்கனவே $70 பில்லியனை பொதுப் போக்குவரத்துக்கும், $30 பில்லியனை நெடுஞ்சாலைகளுக்கும் ஒதுக்கி வருவதாகத் தெரிவித்தார்.
எனினும், இந்த பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், இவை சிறிய அளவிலான மாற்றங்களையே ஏற்படுத்தும் என்றும், வீதி பயன்பாட்டுக் கட்டணம் (Road pricing) போன்ற பாரிய திட்டங்களே நிரந்தர தீர்வாக அமையும் என்றும் உள்கட்டமைப்பு நிபுணர் மட்டி சீமியாடிக்கி (Matti Siemiatycki) தெரிவித்துள்ளார்.










