டிக்-டாக் (TikTok) நிராகரிப்பால் பதின்ம வயது இளைஞர் குத்திக் கொலை – 17 வயது சிறுவன் ஒப்புதல்!

பிரான்சின் பெரிஸ் நகருக்கு அருகிலுள்ள மோ (Meaux) பகுதியில், டிக்-டாக்கில் ஒரு சிறுமி தன்னைத் தொடர்புகொள்ள மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், மற்றொரு பதின்ம வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொன்றதாக 17 வயது சிறுவன் ஒருவன் ஒப்புக்கொண்டுள்ளான்.

வில்வோடு (Villevaude) என்ற முகாம் தளத்தில் சனிக்கிழமை இக்கொலை நடந்துள்ளது.

அச்சிறுமி தன்னை டிக்-டாக்கில் ஏற்க மறுத்ததால் கோபமடைந்த சந்தேக நபர், அவளுடன் தொலைபேசியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அச்சிறுமியின் தோழியின் காதலனான மற்றொரு 17 வயது இளைஞர், தொலைபேசியை வாங்கி சந்தேக நபரை சண்டைக்கு அழைத்துள்ளார்.

இதையடுத்து, முகாம் தளத்திற்கு கத்தியுடன் சென்ற சந்தேக நபர் மற்றும் அவனது நண்பர் ஆகிய இருவர் சேர்ந்து அந்த இளைஞரைத் தாக்கியுள்ளனர்.

இதில் நெஞ்சில் கத்திக் குத்துப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கை காயம் காரணமாக மருத்துவமனைக்கு வந்த சந்தேக நபரை சாட்சியங்களின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்தனர்.

தான் பயப்படவில்லை என்பதைக் காட்டவே கத்தியுடன் சென்றதாகவும், கொலை செய்யும் நோக்கம் தனக்கிருக்கவில்லை என்றும் அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

அவன் மீது திட்டமிட்ட கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

அவனது நண்பனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Related Articles

Latest Articles