கனடாவின் மிகவும் பிரபலமான லொட்டோ மெக்ஸ் (Lotto Max) அதிர்ஷ்ட லாபச் சீட்டின் விலையில் ஏப்ரல் மாதம் முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ஒன்டாரியோ லாட்டரி மற்றும் கேமிங் கார்ப்பரேஷன் (OLG) அறிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு இந்த விளையாட்டு ஆரம்பிக்கப்பட்ட பிறகு, முதல் முறையாக அதன் விலையில் உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதிய மாற்றத்தின்படி, இதுவரை 5 டொலராக இருந்த ஒரு டிக்கெட்டின் விலை 6 டொலராக அதிகரிக்கப்படும்.
இந்த விலை உயர்வு ஏப்ரல் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு முதல் நடைமுறைக்கு வரும் என OLG ஊடகப் பிரிவு பணிப்பாளர் டோனி பிடோண்டி (Tony Bitonti) தெரிவித்துள்ளார்.
விலை உயர்த்தப்பட்டாலும், வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
முன்பு 5 டொலருக்கு 3 தெரிவுகள் வழங்கப்பட்ட நிலையில், இனி 6 டொலருக்கு 4 தெரிவுகள் வழங்கப்படும்.
இதன் மூலம் வெற்றி வாய்ப்பு 1-இல் 7.0 என்பதிலிருந்து 1-இல் 5.8 ஆக உயரும்.
மேலும், லொட்டோ மெக்ஸ் ஜாக்பாட்டின் உச்ச வரம்பு 80 மில்லியன் டொலரிலிருந்து 90 மில்லியன் டொலராக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன், ஒவ்வொரு சீட்டிழுப்பிலும் மேலதிகமாக 100,000 டொலர் பெறுமதியான பல பரிசுகள் ஜாக்பாட் தொகைக்கு ஏற்ப வழங்கப்படும்.
புதிய 90 மில்லியன் டொலர் ஜாக்பாட் வரம்புடனான முதல் சீட்டிழுப்பு ஏப்ரல் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
