கனடாவில் அடுத்தடுத்து பனிச்சரிவு – ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!

பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு பனிச்சரிவுச் சம்பவங்களில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

டெரஸ் (Terrace, B.C.) நகருக்கு வடக்கே உள்ள மவுண்ட் நாஸ் (Mount Knauss) மலையில் ஹெலிகாப்டர் மூலம் பனிச்சறுக்கு விளையாட்டில் (Heli-skiing) ஈடுபட்டிருந்த மூவர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்ததை ஆர்.சி.எம்.பி (RCMP) பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், கனடா – அலாஸ்கா எல்லைக்கு அருகிலுள்ள பிளசண்ட் கேம்ப் (Pleasant Camp) பகுதியில் இடம்பெற்ற மற்றொரு பனிச்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

2025 டிசம்பர் மாதம் முதல் இதுவரை பிரிட்டிஷ் கொலம்பியாவில் பனிச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

வலுவான காற்று மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக மலைப்பகுதிகளில் பனிச்சரிவு அபாயம் “கணிசமாக” (Considerable) காணப்படுவதாக Avalanche Canada எச்சரித்துள்ளது.

மவுண்ட் நாஸ் பகுதியில் உயிரிழந்தவர்களின் விபரங்களை பி.சி. மரண விசாரணை அமைப்பு (B.C. Coroners Service) தற்போது ஆராய்ந்து வருகிறது.

பனிச்சறுக்கு மற்றும் பனி வாகனப் பயணங்களில் ஈடுபடுவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles