ஒன்டாரியோவில் மோசடித் தரகர்களுக்கு கிடுக்கு பிடி – உரிமம் இன்றி இயங்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை!

ஒன்டாரியோவின் நிதிச் சேவைகள் ஒழுங்குமுறை ஆணையம் (FSRA), மாகாணத்தின் அடமானத் தரகர்கள் மற்றும் காப்பீட்டுத் துறையில் நிலவும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்த தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

2024-25 நிதியாண்டுகளில் மட்டும் விதிமீறல்கள் மற்றும் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டவர்கள் மீது 100க்கும் மேற்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டை விட 53 சதவீத உயர்வாகும்.

இந்த நடவடிக்கைகளின் மூலம் சுமார் 1.2 மில்லியன் டொலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன், 25-க்கும் மேற்பட்ட தரகர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, டேனியல் டிபின் (Daniel Tiffin) என்ற முன்னாள் காப்பீட்டுத் தரகர் மீது, உரிமம் இன்றி சட்டவிரோதமாகச் செயல்பட்டதற்காக $50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உரிமம் இல்லாத தரகர்கள் மூலம் காப்பீடு பெறுவது அல்லது அடமானம் பெறுவது வாடிக்கையாளர்களுக்குப் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என FSRA எச்சரித்துள்ளது.

நுகர்வோர் தங்களின் அடமான அல்லது காப்பீட்டு ஆலோசகர்கள் முறையான உரிமம் பெற்றுள்ளனரா என்பதை FSRA இணையதளத்தில் உள்ள தேடல் கருவி மூலம் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மோசடிகளை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களின் நிதியைப் பாதுகாப்பதே இந்த அதிரடி நடவடிக்கைகளின் நோக்கம் என  ஆணைக்குழுவின் பணிப்பாளர் எலிசா சின்ஹா (Elissa Sinha) தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles