கடந்த 2015 ஆம் ஆண்டு ஹாலிபாக்ஸ் (Halifax) சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற ஏர் கனடா விமான விபத்து தொடர்பான கூட்டு வழக்கில் (Class-action lawsuit), 18 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்குவதற்கான முன்மொழிவுக்கு ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
மார்ச் 29, 2015 அன்று டொராண்டோவிலிருந்து வந்த Air Canada Flight 624 விமானம், கடும் பனிப்புயலின் போது தரையிறங்க முயற்சித்த போது மின்சாரக் கம்பிகளில் மோதி ஓடுபாதைக்கு முன்பாகவே விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 133 பயணிகளில் 25 பேர் காயமடைந்தனர்.
தற்போது எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையின்படி, ஏர் கனடா, நாவ் கனடா (Nav Canada) மற்றும் ஹாலிபாக்ஸ் விமான நிலைய அதிகாரசபை ஆகிய தரப்பினர் இணைந்து மொத்தம் 18,075,000 டொலர்களை இழப்பீடாக வழங்கச் சம்மதித்துள்ளனர்.
இதில் ஏர் கனடா நிறுவனம் மட்டும் 15 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையைச் செலுத்தவுள்ளது.
நோவா ஸ்கோஷியாவின் உச்ச நீதிமன்றத்தில் (Nova Scotia’s Supreme Court) எதிர்வரும் ஜூன் 22 ஆம் திகதி இதற்கான இறுதி விசாரணை நடைபெறவுள்ளது.
நியூயோர்க் லாகார்டியா விமான நிலையத்தில் சமீபத்தில் இடம்பெற்ற ஏர் கனடா விபத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீண்டகால நீதிப் போராட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாகவும் போதுமான அளவுக்கும் இழப்பீடு கிடைப்பதை இந்தத் தீர்வு உறுதி செய்யும் என சட்டத்தரணி ரே வாக்னர் (Ray Wagner) தெரிவித்துள்ளார்.
