மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, கனடாவில் எரிபொருள் விலை ஒரு லீற்றருக்கு 2 டொலர்களைத் தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
டொராண்டோ (Greater Toronto Area) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு லீற்றர் பெற்றோல் விலை 8 சதம் உயர்ந்து 1.78 டொலராகப் பதிவாகியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) போன்ற பகுதிகளில் ஏற்கனவே விலை 2 டொலர்களைத் தாண்டியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் முழுமையாக முடக்கப்போவதாக எச்சரித்துள்ளது.
இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பங்குச்சந்தைகளிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த நட்பு நாடுகளுடன் இணைந்து ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க உதவுவதாக பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்குயின்டி (David McGuinty) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்த விலையேற்றம் பெற்றோல் நிலையங்களுடன் நிற்காமல், மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளின் விலையையும் உயர்த்தும் என கனடிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு (CLC) கவலை வெளியிட்டுள்ளது.
உலகளாவிய அமைதியற்ற சூழல் தொடரும் பட்சத்தில், எரிபொருள் விலை கட்டுக்கடங்காமல் உயரக்கூடும் என En-Pro நிறுவனத்தின் தலைமை பகுப்பாய்வாளர் ரோஜர் மெக்நைட் (Roger McKnight) சுட்டிக்காட்டியுள்ளார்.










