எபோலா வைரஸ் (Ebola) பரவல் அச்சுறுத்தல் காரணமாக, அப் பிராந்தியங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு 21 நாட்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தல் (Self-isolation) உத்தரவை கனடா அரசு பிறப்பித்துள்ளது.
அத்துடன் Democratic Republic of Congo, South Sudan மற்றும் Uganda ஆகிய நாடுகளின் குடிவரவு விண்ணப்பங்களுக்கான இறுதி முடிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கனடா பொது சுகாதார முகமையின் (Public Health Agency of Canada) பணிப்பாளர் நாயகம் லூக் பிரிஸ்பாய்ஸ் (Luc Brisebois) மற்றும் சுகாதார அமைச்சர் மார்ஜோரி மிஷெல் (Marjorie Michel) ஆகியோர் செவ்வாய்க்கிழமை இது குறித்து விளக்கமளித்தனர்.
இதன்போது, கனடாவுக்கு தற்போதைய ஆபத்து குறைவாகவே உள்ளது என்றும், வரவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் மற்றும் கோடைகாலப் பயணங்களைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாகவே இந்த கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நாடுகளில் தற்பொழுது பரவி வரும் ‘பன்டிபுகியோ’ (Bundibugyo) வைரஸுக்கு முறையான தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ இல்லை என உலக சுகாதார அமைப்பு (WHO) குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கனடா அரசு குவாரன்டைன் சட்டத்தின் (Quarantine Act) கீழ் சனிக்கிழமை முதல் ஒகஸ்ட் 29 வரை இக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துகிறது.
இதன்படி, அறிகுறிகளுடன் வரும் பயணிகள் நேரடியாக மருத்துவமனைக்கு மாற்றப்படுவர், அறிகுறிகள் இல்லாதவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
மேலும், இக்குறிப்பிட்ட மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா மற்றும் குடிவரவு விண்ணப்பங்களை பரிசீலிப்பது புதன்கிழமை முதல் 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக குடிவரவுத் துறையின் அதிகாரி தாரா லாங் (Tara Lang) தெரிவித்துள்ளார்.
இதுவரை கனடாவிலோ அல்லது வட அமெரிக்காவிலோ எபோலா பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
