கனடாவின் எஜாக்ஸ் (Ajax) பகுதியில் கடந்த மாதம் போலித் துப்பாக்கியைக் காட்டி நபர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ், 24 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 13 அன்று மதியம், பேலி ஸ்ட்ரீட் வெஸ்ட் (Bayly Street West) மற்றும் மொனார்க் அவென்யூ (Monarch Avenue) சந்திப்பில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக டர்ஹாம் பிராந்திய பொலிசார் (Durham Regional Police) தெரிவித்துள்ளனர்.
இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது, சந்தேக நபர் துப்பாக்கியைப் போன்று தோற்றமளிக்கும் ஆயுதத்தை வெளியே எடுத்து மற்றவரை அச்சுறுத்தியுள்ளார்.
பொலிஸார் வருவதற்குள் அவர் அங்கிருந்து தப்பிச் சென்ற போதிலும், நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு கடந்த புதன்கிழமை ஒஷாவா (Oshawa) பகுதியைச் சேர்ந்த ஹெதாயத்துல்லா அடல் (Hedayatullah Atal) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் மீது அச்சுறுத்தல் விடுத்தல் மற்றும் போலித் துப்பாக்கியைப் பயன்படுத்தி குற்றம் இழைத்தல் உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஒஷாவாவில் உள்ள அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அச்சுறுத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட போலித் துப்பாக்கியைப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
