அடுத்த மாதம் றொரண்டோவில் (Toronto) நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்து (FIFA World Cup) போட்டிகளுக்காக நகரம் தயாராகி வருகிறது.
இந்த வேளையில், யூனியன் ரயில் நிலைய (Union Station) பகுதியில் தங்கியிருக்கும் வீடற்ற மக்கள் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
‘றொரண்டோ அண்டர்ஹவுஸ்டு அண்ட் ஹோம்லெஸ் யூனியன்’ (Toronto Underhoused and Homeless Union – TUHU) எனும் அமைப்பு, யூனியன் நிலையத்தில் தங்கியிருந்த 45 வீடற்றவர்களிடம் நடத்திய நேர்காணலில், சுமார் 90 சதவீதமானோர் அங்குள்ள தனியார் பாதுகாப்புப் பிரிவினரின் வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக நகரை அழகுபடுத்தும் நோக்கில், இவ்வாறான மனிதாபிமானமற்ற மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சமூக ஆர்வலர் ஆஞ்சி ஹாக்கிங் (Angie Hocking) மற்றும் றொரண்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் ராபர்ட்ஸ் (David Roberts) ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக, உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறும் காலப்பகுதியில் வீடற்றவர்களுக்கான 24 மணி நேர தற்காலிக தங்குமிடங்களை (Respite spaces) அமைக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வன்முறையில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினருக்குப் பதிலாகப் பாதிப்பைக் குறைக்கும் சமூகப் பணியாளர்களை நியமிக்குமாறும் TUHU அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து றொரண்டோ மாநகர சபை விளக்குகையில், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்குத் தேவையான தங்குமிடம், சுகாதாரம் மற்றும் மனநல ஆதரவை வழங்குவதற்காக ஏப்ரல் மாதம் முதல் கூட்டுக் குழுக்களுடன் இணைந்து ஒரு விசேட முன்னோடித் திட்டம் (Pilot project) செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
