டொராண்டோ பிராந்திய நிலப்புலன் சபை (TRREB), கடந்த மார்ச் மாதத்திற்கான வீட்டு விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஆறு மாதங்களில் முதல் முறையாக டொராண்டோ மற்றும் ஜிடிஏ (GTA) பகுதிகளில் வீட்டு விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அதிகரித்துள்ளது.
மார்ச் மாதத்தில் மொத்தம் 5,039 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டை விட 1.7 சதவீத வளர்ச்சியாகும்.
வீட்டு விற்பனை அதிகரித்துள்ள போதிலும், சராசரி விற்பனை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
டொராண்டோவில் ஒரு வீட்டின் சராசரி விலை தற்போது $1,017,796 ஆகப் பதிவாகியுள்ளது, இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 6.7 சதவீதக் குறைவாகும்.
விலை குறைந்துள்ளதால் அதிகமானோர் வீடுகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருவதாக TRREB தலைவர் டேனியல் ஸ்டெய்ன்ஃபீல்ட் (Daniel Steinfeld) தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சந்தைக்கு வரும் புதிய வீடுகளின் எண்ணிக்கை (New listings) 16.7 சதவீதத்தால் குறைந்துள்ளது.
தற்போது சந்தையில் சுமார் 21,596 வீடுகள் விற்பனைக்குத் தயாராக உள்ள நிலையில், கடந்த ஆண்டை விடக் கையிருப்பில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை 8 சதவீதத்தால் சரிவடைந்துள்ளது.










