கனடாவின் பி.சி. ஒகானகன் (B.C.’s Okanagan) பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தொன்றின் போது காணாமல் போன ‘டெய்ஸி’ (Daisy) என்ற நாய், மூன்று நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இப்பகுதியில் கார் விபத்தொன்று ஏற்பட்ட போது, அங்கிருந்த ‘ஆஸ்திரேலியன் ஷெப்பர்ட்’ (Australian shepherd) இனத்தைச் சேர்ந்த 3 வயது டெய்ஸி என்ற நாய் பயந்து காட்டை நோக்கி ஓடி மறைந்தது.
காணாமல் போன வளர்ப்புப் பிராணிகளைத் தேடுவது சென்ட்ரல் ஒகானகன் தேடல் மற்றும் மீட்புக் குழுவின் (Central Okanagan Search and Rescue – COSAR) உத்தியோகபூர்வ கடமை இல்லை என்றாலும், அந்த அமைப்பின் தன்னார்வலரான பொரஸ்ட் கெல்லர்மன் (Forrest Kellerman) தனது சொந்த முயற்சியால் தேடலில் இறங்கினார்.
தனது மனைவியுடன் இணைந்து இரண்டு நாட்களாக காடுகள் மற்றும் வீதிகளில் தேடியும் நாய் கிடைக்கவில்லை.
எனினும், செவ்வாய்க்கிழமை மாலை கெல்லர்மனின் மனைவி விபத்துக்குள்ளான காரை உற்றுநோக்கிய போது, விபத்து நடந்த அதே காரின் பயணிகள் இருக்கையில் (Passenger seat) டெய்ஸி மிகவும் பொறுமையாக அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மூன்று நாட்கள் காட்டில் தனியாகத் தவித்த நாய், மீண்டும் விபத்து நடந்த காரிடமே வந்து காத்துக்கொண்டிருந்த நிலையில், உடனடியாக அதன் உரிமையாளர்களுக்குத் தகவல் வழங்கப்பட்டு நாய் அவர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.










