கனடாவில் பெற்றோல் விலை ஒரு லீற்றருக்கு சுமார் 2 டொலரை எட்டியுள்ள நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.
பிராம்ப்டன் (Brampton) நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் தெரிவித்தார்.
ஈரான் – அமெரிக்க (Iran-U.S.) போர் காரணமாக உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என விளக்கமளித்தார்.
இந்த இக்கட்டான சூழலில் கனடியர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், எரிபொருள் மீதான வரிகளை இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre) வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாகப் பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய எரிபொருள் வரி மற்றும் GST ஆகியவற்றை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரியுள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ள வசந்தகால பொருளாதார அறிக்கையில் (Spring economic update), எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏதேனும் சலுகைகள் அறிவிக்கப்படுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இது குறித்த மேலதிக விபரங்களையோ அல்லது காலக்கெடுவையோ பிரதமர் இன்னும் வெளியிடவில்லை.










