கனடா (Canada) சாஸ்கடூன் (Saskatoon) நகரில் உள்ள ‘ஜிம் பாட்டிசன் குழந்தைகள் மருத்துவமனையில்’ (Jim Pattison Children’s Hospital), பிரசவ கால சிக்கல் காரணமாக 24 வயதுடைய ஜாலி வீனி-சதர்லாண்ட் (Jaali Weenie-Sutherland) என்ற கர்ப்பிணித் தாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 26 அன்று கடுமையான வலி, மூச்சுத்திணறல் மற்றும் இருமலின் போது இரத்தம் வெளியேறியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ‘ப்ரீ-எக்லாம்ப்சியா’ (pre-eclampsia – கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம்) பாதிப்பு கண்டறியப்பட்டது.
எனினும், அவர் சுமார் 13 மணித்தியாலங்கள் தீவிரக் கவனிப்புப் பிரிவில் (observation room) அலட்சியமாக வைக்கப்பட்டு, பின்னர் பிரசவ வார்டுக்கு மாற்றப்பட்ட இரண்டு மணி நேரத்தில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மருத்துவர்கள் ஆரம்பத்திலேயே எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிந்து செயல்பட்டிருந்தால் இந்த மரணத்தைத் தடுத்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், பழங்குடியின (Indigenous) பெண்கள் சுகாதாரத்துறையில் இன்றும் திட்டமிட்ட புறக்கணிப்புகளை எதிர்கொள்வதாகவும் கூறி, இறந்துபோன தாயின் குடும்பத்தினரும், ‘பழங்குடி இனங்களின் கூட்டமைப்பும்’ (Federation of Sovereign Indigenous Nations – FSIN) இது குறித்து சுயாதீன விசாரணை நடத்தக் கோரியுள்ளனர்.
இந்த விபரீதங்களுக்கு மத்தியிலும் அவரது பெண் குழந்தை பத்திரமாக உயிர்பிழைத்துள்ளது.
குழந்தையின் தந்தை பிளெய்ன் மோரின் (Blayne Morin), தனது மனைவியின் நினைவாக மகளை அன்போடு வளர்க்கப்போவதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் சமூகப் பணித்துறையில் (Social Work) பல்கலைக்கழகப் பட்டம் பெறவிருந்த ஜாலியின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ‘சாஸ்காட்செவன் சுகாதார வாரியம்’ (Saskatchewan Health Authority – SHA) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, இந்த மரணம் குறித்து ‘முக்கியமானதொரு சம்பவமாக’ (critical incident) கருதி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
