தற்கொலை கிட் விற்பனை செய்த உக்ரைன் நபர் – கனடிய தாயின் போராட்டத்தால் இணையதளம் முடக்கம்!

கனடாவின் ஒட்டாவா (Ottawa) நகரைச் சேர்ந்த 22 வயது மரபணு ஆலோசகர் மாணவியான அனிகா (Anneka), உக்ரைனில் இருந்து ஆன்லைன் மூலம் ‘SN’ என்ற நச்சுப் பொருளை (Suicide kit) வாங்கி உட்கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்துகொண்டார்.

அனிகாவின் மரணத்திற்குப் பிறகு அவரது தாய் சூசன் டாலின் ஓ’கிராடி (Susan Dallin O’Grady), இந்த ஆபத்தான நச்சுப் பொருளை வெறும் 124 கனடிய டொ​லருக்கு விற்பனை செய்த உக்ரைனைச் சேர்ந்த லியோனிட் ஜகுடென்கோ (Leonid Zakutenko) என்பவரின் பின்னணியை ‘W5’ ஊடகத்தின் உதவியுடன் அம்பலப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட தாயின் தொடர் கேள்விகளாலும், ஊடகங்களின் நெருக்குதலாலும் லியோனிட் ஜகுடென்கோ (Leonid Zakutenko) தனது இணையதளத்தை தற்போது முடக்கியுள்ளார்.

எனினும், மாற்று வழிகளில் அவர் இன்னமும் வணிகம் செய்யக்கூடும் என்பதால், கனடிய இளைஞர்களைப் பாதுகாக்க ஆன்லைன் தீங்குகள் மசோதாவை (Online Harms Bill) அரசு விரைவாக சட்டமாக்க வேண்டும் என்று சூசன் (Susan) கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோன்ற நச்சுப் பொருட்களை விற்பனை செய்த ஒன்ராறியோவைச் சேர்ந்த கென்னத் லா (Kenneth Law) என்பவர், தற்கொலைக்கு தூண்டியதாக அண்மையில் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அத்துடன், கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் மட்டும் இதனால் 29 மரணங்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நெருங்கி உரையாட வேண்டும் என அனிகாவின் தாய் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles