டொராண்டோவின் சப்வே சேவைப் பாதையான Line 2 (புளூர்-டேன் போர்த்), ஓல்ட் மில் (Old Mill) நிலையத்தில் ஏற்பட்ட ஹைட்ராலிக் எண்ணெய் கசிவு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் ஸ்தம்பித்துள்ளது.
ஜேன் (Jane) மற்றும் இஸ்லிங்டன் (Islington) நிலையங்களுக்கு இடையிலான சேவை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், பயணிகளின் வசதிக்காக கீல் (Keele) மற்றும் கிப்ளிங் (Kipling) நிலையங்களுக்கு இடையே 50-க்கும் மேற்பட்ட ஷட்டில் பஸ்கள் (Shuttle buses) இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று அதிகாலை 2:30 மணியளவில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகளின் போது இந்த எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் காலை நேர வேலைக்குச் செல்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
நிலைமையைச் சீர்செய்யும் வரை, பயணிகள் தங்களது TTC பயணச் சீட்டுகளைப் பயன்படுத்தி கிப்ளிங் மற்றும் யூனியன் (Union) உள்ளிட்ட கோ ட்ரான்சிட் (GO Transit) நிலையங்களில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் சேவை பாதிப்பு குறித்து TTC தலைமை நிர்வாக அதிகாரி மந்தீப் லாலி (Mandeep Lali) பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
“இன்று காலை எங்கள் வாடிக்கையாளர்களை நாங்கள் ஏமாற்றிவிட்டோம், இதற்காக நான் வருந்துகிறேன்” எனத் தெரிவித்துள்ள அவர், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
எப்போது சேவை வழமைக்குத் திரும்பும் என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.










