கனடாவின் வெளியுறவுத்துறையான (Global Affairs Canada – GAC), தனது வரவுசெலவுத் திட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 1,200க்கும் மேற்பட்ட பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கடந்த ஆண்டு அறிவித்த சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 2029 ஆம் ஆண்டுக்குள் பணியாளர் எண்ணிக்கையில் 9.4 சதவீதத்தைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில், மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் உயர்திறன் கொண்ட FS-04 தரவரிசை இராஜதந்திரிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு சேவை அதிகாரிகளின் தொழிற்சங்கத் தலைவரான பாம் ஸ்பீல்ட் (Pam Isfeld) கவலை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக, அணுசக்தி நிபுணர்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் போன்ற நிபுணத்துவம் வாய்ந்த 34 பணியிடங்கள் முற்றாக நீக்கப்படவுள்ளன.
இந்த மாற்றங்கள் சர்வதேச அரங்கில் கனடாவின் செல்வாக்கைக் குறைக்கும் என இராஜதந்திரிகள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், வெளிநாடுகளுக்குப் பணியமர்த்தப்படும் தூதுவர்கள் தங்களின் உடைமைகளைக் கொண்டு செல்வதற்கான சலுகைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand), நாட்டின் வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளுக்கு ஏற்பவே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
2029 ஆம் ஆண்டுக்குள் இத்திட்டத்தின் மூலம் சுமார் 1.12 பில்லியன் டொலர்களைச் சேமிக்கும் அரசாங்கம் இலக்கை நிர்ணயித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
