கனடிய குடியுரிமைச் சட்டத்தில் Bill C-3 எனும் புதிய திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அமெரிக்காவிலிருந்து கனடிய குடியுரிமை கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.
2025 டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, வெளிநாடுகளில் பிறந்தவர்களுக்கும், அவர்களின் பெற்றோர் அல்லது தத்தெடுத்தவர்கள் கனடியர்களாக இருக்கும் பட்சத்தில், எவ்வித தலைமுறை கட்டுப்பாடும் இன்றி குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, முதல் தலைமுறையினருக்கு மட்டுமே (First-generation limit) இந்த உரிமை வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், இது அரசியலமைப்பிற்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
ஒட்டாவாவைச் சேர்ந்த குடிவரவு சட்டத்தரணி கசாண்ட்ரா புல்ட்ஸ் (Cassandra Fultz) கூறுகையில், 2025 டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன் பிறந்த, கனடிய வம்சாவளியைச் சேர்ந்த எவரும் இப்போது குடியுரிமைச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அமெரிக்காவின் கலிபோர்னியா (California), வாஷிங்டன் (Washington) மற்றும் ஓரிகான் (Oregon) போன்ற மேற்கு மாநிலங்களிலிருந்தும், கியூபெக் மற்றும் அக்காடியன் (Acadians) வம்சாவளியினரிடமிருந்தும் பெருமளவிலான விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.
குடியுரிமை என்பது தானாகக் கிடைக்காது என்றும், தகுதியுள்ளவர்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.










