கனடாவின் வடக்குப் பகுதிகளில் மின்சார நெருக்கடி!

கனடாவின் வடக்கு நிலப்பகுதிகளான யூக்கான் (Yukon), நுனாவுட் (Nunavut) மற்றும் வடமேற்குப் பகுதிகள் (Northwest Territories) தங்களின் பழமையான மின்சாரக் கட்டமைப்புகளைப் புதுப்பிக்க மத்திய அரசிடம் பில்லியன் கணக்கான டொலர்களைக் கோரியுள்ளன.

1960-களில் அமைக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் அவற்றின் ஆயுட்காலத்தை தாண்டிவிட்டதாலும், கடும் குளிர்காலங்களில் மின்தடை ஏற்படும் அபாயம் இருப்பதாலும் இந்த அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

யூக்கான் எரிசக்தி அமைச்சர் டெட் லேக்கிங் (Ted Laking), கடந்த டிசம்பரில் வெப்பநிலை -50°C ஐ நெருங்கியபோது வைட்ஹார்ஸ் (Whitehorse) நகரம் மின்சார நெருக்கடியின் விளிம்பிற்குச் சென்றதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுனாவுட்டில் உள்ள 25 சமூகங்களும் தனித்தனி டீசல் மின் நிலையங்களையே நம்பியுள்ளன.

இதில் பல நிலையங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலானவை என்று Qulliq Energy Corp தலைவர் ஏர்னஸ்ட் டக்ளஸ் (Ernest Douglas) எச்சரித்துள்ளார்.

மின்சாரம் தடைப்பட்டால் முழுச் சமூகத்தையுமே வெளியேற்ற வேண்டிய (Relocation) இக்கட்டான சூழல் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) புதிய தேசிய மின்சார மூலோபாயத்தை (National Electricity Strategy) அறிவித்துள்ளார்.

இந்நிலையில், வடக்குப் பகுதி தலைவர்கள் இந்த முதலீடுகளை நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆர்க்டிக் (Arctic) இறையாண்மையைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாகக் கருதுகின்றனர்.

சுமார் 140,000 மக்கள் வாழும் இப்பகுதிகளில் மின்சாரத் தடையைத் தவிர்க்கவும், எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உடனடி நிதி முதலீடு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles