நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்டீபன் ஜோசப் கொனாசிவிச் (Stefan Joseph Konasiewicz), ஒன்டாரியோவின் றொரண்டோ, ஹாமில்டன் மற்றும் நியூமார்க்கெட் ஆகிய பகுதிகளில் கிளினிக்குகளை நடத்தி வந்தார்.
தற்போது, மருத்துவ முறைகேடு மற்றும் நோயாளியின் மரணத்திற்குப் பொறுப்பானவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 6 மாத காலம் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஒன்டாரியோ மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கல்லூரி (CPSO) மேற்கொண்ட விசாரணையில், இவர் சிகிச்சை அளித்த 15 நோயாளிகளில் 12 பேரின் சிகிச்சை முறைகள் தரமற்றதாக இருந்தது கண்டறியப்பட்டது.
குறிப்பாக, 2015 முதல் இவரிடம் சிகிச்சை பெற்று வந்த 70 வயது நோயாளி ஒருவருக்கு, கழுத்து மற்றும் தோள்பட்டை வலிக்காக வழங்கப்பட்ட ஊசி சிகிச்சையின் போது, ஊசி தவறாக முதுகெலும்புத் தண்டுவடத்திற்குள் செலுத்தப்பட்டதால் அந்த நோயாளி உயிரிழந்தார்.
ஏற்கனவே இவருக்கு ஊசி சிகிச்சைகளை வழங்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலும், 2025 மே மாதம் ஒரு நோயாளிக்கு அவர் மீண்டும் ஊசி மருந்துகளை வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, அவரது மருத்துவ உரிமத்தை இடைநீக்கம் செய்துள்ள CPSO சபை, மீண்டும் அவர் பணிக்குத் திரும்பும் போது 12 மாதங்களுக்கு மற்றுமொரு மருத்துவக் கண்காணிப்பாளரின் கீழ் பணிபுரிய வேண்டும் என்றும், அதற்கான செலவை அவரே ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.










