கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில் உள்ள ரோஸ்டேல்Subway நிலையத்திற்கு (Rosedale Station) அருகில் இருவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய 21 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்து, அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை 2:45 மணியளவில், ரோஸ்டேல் நிலையத்திற்குள் நுழைந்த குறித்த நபர், அங்கு வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு கருவியைத் திருடிக் கொண்டு வெளியே வந்து அருகில் இருந்த இருவரை நோக்கிச் சென்றுள்ளார்.
அவரிடமிருந்து தப்பிக்க இருவரும் ஓட முயன்றபோது, ஒருவர் கீழே விழுந்து தாக்குதலுக்கு இலக்கானார். அவரைக் காப்பாற்ற முயன்ற இரண்டாவது நபரும் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
படுகாயமடைந்த இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய லோகன் கச்சென் (Logan Cachene) என்ற 21 வயது இளைஞரை, வெள்ளிக்கிழமை பாதர்ஸ்ட் வீதி (Bathurst Street) மற்றும் எக்ளிண்டன் அவென்யூ (Eglinton Avenue) பகுதிக்கு அருகில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் மீது கொலை முயற்சி, தாக்குதல், $5,000 டொலருக்கு உட்பட்ட திருட்டு மற்றும் பிணை நிபந்தனைகளை மீறியமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
