குழந்தைகளைத் தத்தெடுக்க ஆவலுடன் காத்திருந்த ஆயிரக்கணக்கான தம்பதியரை ஏமாற்றி, அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்த அமெரிக்கப் பெண் ஒருவருக்கு 20 மாதங்கள் கூட்டாட்சிச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காப்ரியேல் வாட்சன் (Gabryele Watson) என்ற 30 வயதுப் பெண், கடந்த 7 ஆண்டுகளாக இணையம் வழியாகக் குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பும் தம்பதியரைக் குறிவைத்து இந்த நூதன ஏமாற்று வேலையைச் செய்துள்ளார்.
இவர் பாதிக்கப்பட்டவர்களிடம் பணத்தைக் கோரவில்லை. மாறாக, இணையத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் விபரங்களைத் திருடி, தானே கர்ப்பமாக இருப்பது போலவும், பிறக்கப் போகும் குழந்தையை அவர்களுக்குத் தத்தெடுக்கத் தருவதாகவும் கூறி பழகியுள்ளார்.
தம்பதியினர் குழந்தையை வரவேற்கத் தயாராகும் போது, தான் போதைப்பொருள் பயன்படுத்தப் போவதாக குழந்தையையோ அல்லது தத்தெடுக்கக் காத்திருக்கும் தம்பதியரின் பிற பிள்ளைகளையோ கொலை செய்யப் போவதாகவும் கூறி கொடூரமான மிரட்டல்களை விடுத்துள்ளார்.
வாட்சனுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாலும், 2012 இல் அவரது தாயார் இறந்ததாலும் கடுமையான மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியிருந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இதனால் அவரது குடும்பத்தினரே அவருடனான உறவைத் துண்டித்திருந்தனர்.
இணையவழித் துன்புறுத்தல் (Cyberstalking), அடையாளத் திருட்டு மற்றும் கடத்தல் மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகளை வாட்சன் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு இந்த 20 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மனநலக் குறைபாடுகள் இருந்தபோதிலும், அவர் பாதிக்கப்பட்ட தம்பதியருக்கு ஏற்படுத்திய மன உளைச்சலும் ஏமாற்றமும் மன்னிக்க முடியாதது என நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வாதிட்டது.










