கனடாவின் மாகாண நெடுஞ்சாலை 401 இல் (Highway 401) நள்ளிரவில் ஏற்பட்ட வாகன விபத்தையடுத்து, காரை விட்டு வெளியே வந்த மிசிசாகா (Mississauga) பெண் ஒருவர் மற்றொரு வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு (Pearson International Airport) அருகில், எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட் (Eglinton Avenue West) பகுதிக்கு கிழக்கே உள்ள 401 கிழக்கு நோக்கிய பாதையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
முதலில் ஒரு எஸ்யூவி (SUV) ரக வாகனமும் மற்றொரு காரும் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த முதல் விபத்தையடுத்து, எஸ்யூவி காரை ஓட்டிவந்த பெண் அதிலிருந்து கீழே இறங்கியுள்ளார்.
அவ்வாறு அவர் சாலையில் நின்றபோது, அங்கு வந்த வேறொரு பயணியர் வாகனம் (Passenger vehicle) அவர் மீது மிகக் கொடூரமாக மோதியுள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த 40 வயதுப் பெண் அவசர சிகிச்சை மையத்திற்கு (Trauma centre) கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மிசிசாகாவைச் சேர்ந்த 40 வயதுப் பெண் என்பதைத் தவிர அவரது மேலதிக விபரங்களையோ, அல்லது இவ்விபத்து தொடர்பாக எவர் மீதாவது குற்றம் சுமத்தப்படுமா என்ற விபரத்தையோ மாகாண பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை.
நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும் போது வாகனங்களை விட்டு பாதுகாப்பற்ற முறையில் இறங்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது.










