பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்ட் (Richmond) நகரில் தனது 71 வயது தாயை அடித்துக் கொன்ற 39 வயது மகனுக்கு, மனநல பாதிப்பு காரணமாக குற்றவியல் பொறுப்பு இல்லை (Not Criminally Responsible) என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2024 ஏப்ரல் மாதம், கனடா போஸ்ட் (Canada Post) முன்னாள் ஊழியரான ஆல்வின் இயூ-குவாங் லீ (Alvin Yiu-Kwong Lee), தனது தாய் புளோரா சாங் (Flora Tsang) என்பவரைத் தனது இல்லத்திலேயே கொடூரமாகத் தாக்கி கொலை செய்தார்.
பொலிஸார் வீட்டிற்குள் நுழைந்தபோது, இரத்தக் கறைகள் சுவர்களிலும் தரையிலும் படிந்திருந்தன.
வீட்டின் முன் வளாக பகுதியில் மரச்சாமான்கள் மற்றும் அலமாரிகளுக்கு அடியில் புளோராவின் உடல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
பி.சி. உச்ச நீதிமன்ற (B.C. Supreme Court) நீதிபதி ஜான் வாக்கர் (John Walker) வழங்கிய தீர்ப்பில், லீக்கு 2008-ஆம் ஆண்டிலிருந்தே ஸ்கிசோபெர்னியா (Schizophrenia) பாதிப்பு இருந்ததாக அறியப்பட்டிருந்த்து.
அவர் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தியதால் ஏற்பட்ட தீவிர மனநோயினால் (Psychosis) தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் தனது தாயைத் தாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் லீயைக் குற்றவாளியாகக் கருதாமல், மேலதிக சிகிச்சைக்காக கோக்விட்லம் (Coquitlam) பகுதியில் உள்ள தடயவியல் மனநல மருத்துவமனையில் (Forensic Psychiatric Hospital) அனுமதிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.










